×

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக முகுல் வாஸ்னிக் தலைமையில் காங்கிரஸ் மேலிட குழு வருகை: திமுக குழுவுடன் இன்று சந்திப்பு

சென்னை: திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்த முகுல் வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் மேலிட குழு இன்று சென்னை வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளது.தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இந்த கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், திமுக -காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகிய மூவர் அடங்கிய மேலிட குழு இன்று சென்னை வருகிறது. இவர்கள், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

பின்னர் மாலை 3 மணியளவில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசுவதற்கு அண்ணா அறிவாயத்துக்கு செல்கின்றனர். அவர்களுடன், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோரும் செல்கின்றனர். கடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையில் தொகுதிகள் எண்ணிக்கை உறுதி செய்யப்படும் பட்சத்தில் அதை டெல்லி மேலிடத்தில் குழு தெரிவிக்கும். அங்கு தொகுதி எண்ணிக்கையை ஏற்ற பிறகு எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது பற்றி அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக முகுல் வாஸ்னிக் தலைமையில் காங்கிரஸ் மேலிட குழு வருகை: திமுக குழுவுடன் இன்று சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Congress High Commission ,Mukul Wasnik ,DMK ,CHENNAI ,Congress ,India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...